DMK: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத் துறைக்கு பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நவம்பர் 24 வரை அவகாசம் வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடமிருந்து பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கு தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அந்த வழக்கின் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் பல சாட்சிகள் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ளனர். இதே சமயம், செந்தில் பாலாஜியின் உதவியாளர்கள் கார்த்திகேயன் மற்றும் கணேசன் உள்ளிட்ட இருவர், சிறப்பு நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு வரும் வரை ED வழக்கை விசாரிக்கக் கூடாது என்று கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி மற்றும் அமெரிக்காவில் இதய சிகிச்சைக்காக சென்றுள்ள அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரணையின் போது அமலாக்கத் துறையின் வழக்கறிஞர், மனுவுக்கு பதிலளிக்க சிறிது அவகாசம் வழங்குமாறு கோரினார். அதனை ஏற்று, நீதிபதி EDக்கு நவம்பர் 24க்குள் பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், வழக்கின் அடுத்த விசாரணையையும் அதே தேதிக்கு தள்ளி வைத்தார். தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் இந்த வழக்கு தமிழக அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

