TVK DMK: தவெக சார்பில் கரூரில் நடந்த பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 60 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். திரையுலகில் மிக பிரபல நடிகராக அறியப்படும் விஜய்யை பார்க்க கூடிய கூட்டம் காரணமாக இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டது நாட்டையே உலுக்கியது. கரூருக்கு முன்பு விஜய் 5 இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போதெல்லாம் நிகழாத அசம்பாவிதம் திமுகவின் கோட்டையாக கருதப்படும் கரூரில் நிகழ்ந்ததால், இது நிச்சயம் திமுகவின் சதி திட்டமாக இருக்கும் என தவெக நிர்வாகிகள் தொடங்கி தலைமை வரை கூறி வந்தனர்.
ஆனால் திமுகவை சேர்ந்தவர்களோ, தவெக தொண்டர்களுக்கு கூட்டத்தை சரியாக வழி நடத்த தெரியவில்லை. அரசியல் அனுபவம் இல்லாததால் இத்தனை இழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று மாறி மாறி குறை கூறி வந்தனர். இதனால் தமிழக அரசு இதனை விசாரிக்க ஒரு தனி நபர் குழுவை அமைத்தது. இதனை மறுத்த தவெக தரப்பு சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்தது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட, சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்நிலையில் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்திடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் இது திமுகவின் சதி திட்டம் என்பதையும், இதற்கு முக்கிய காரணம் செந்தில் பாலாஜி என்றும் இவர்கள் கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. செந்தில் பாலாஜி மற்றும் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சில பேர் மீது ஊழல் புகார் இருக்கும் நிலையில், தற்போது இதனையும் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திமுக தலைமை குழப்பத்தில் உள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

