TVK BJP: தமிழக அரசியலில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதற்கு தீனி போடும் வகையில் நடிகர் விஜய் கட்சி துவங்கி அதனை தேற்றும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் முதற்கட்டமாக மக்கள் சந்திப்பை தீவிரப்படுத்தியுள்ள இவர், கரூர் சம்பவத்தில் முடங்கி இருந்தார். இதனை தொடர்ந்து இன்று ஈரோட்டில் தவெக பரப்புரை நடத்தியது. இது கரூரை போல அல்லாமல் வெற்றிகரமாகவும், கவனமாகவும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
விஜய்க்கு இயல்பாகவே மக்கள் ஆதரவு அதிகம். அதிலும் அவர் கட்சி தொடங்கியவுடன் அவரது ரசிகர்கள் அனைவரும், எங்கள் ஒட்டு விஜய்க்கு தான் என்று முழக்கமிட தொடங்கிவிட்டன. இவருக்கான ஆதரவை கண்ட அதிமுகவும், தேசிய கட்சியான பாஜகவும் இவரை கூட்டணியில் சேர்க்க முயற்சிக்க, கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்பதில் விஜய் தெளிவாக இருந்தார். கரூர் சம்பவத்தில் தவெகவின் குரலாக பாஜக செயல்பட்ட போதும் கூட விஜய் கூட்டணிக்கு சம்மதிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பாஜக அவரை நேரடியாக விமர்ச்சிக்க தொடங்கியது. அவரை விமர்சிப்பது ஒரு புறம் இருந்தாலும், விஜய்யை கூட்டணியில் சேர்ப்பதற்கான உள்ளடி வேலைகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன. பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள், செய்தியாளர் சந்திப்பில் கூட விஜய் எங்கள் கூட்டணியில் சேர்ந்து தான் ஆக வேண்டும் என்பதை மறைமுகமாக கூறி வந்தனர். ஆனால் தற்போது இதனை, பாஜகவின் மூத்த மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேரடியாகவே கூறியுள்ளார். டிசம்பர் 17 ஆம் தேதி பாஜகவின் மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய இவர், விஜய் எங்களுடம் கூட்டணிக்கு வந்தால் வரட்டும், இல்லையென்றால் அவர் சினிமாவுக்கே போகட்டும். மற்றபடி அவர் தனித்து நிற்பதால் எந்த பயனுமில்லை என்று விஜய்யை நேரடியாக கூட்டணிக்கு அழைத்துள்ளார். இதனை மற்றொரு புறம் இருந்து பார்த்தால், பாஜக விஜய்யை கூட்டணிக்கு வரவில்லை என்றால் உங்கள் அரசியல் எதிர்காலத்தை அழித்து விடுவோம் என்று மிரட்டுவது போல உள்ளது எனவும் அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.