கொரோனா பரவல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிகரித்து காணப்பட்ட நிலையில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை விடப்பட்டது. போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தவித்து வந்தனர். அதன் பிறகு தடுப்பூசி போடப்பட்டு கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. இந்தியா முழுவதும் இன்று காலை நிலவரப்படி சுமார் 3,961 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக சென்னை, மும்பை அகமதாபாத் போன்ற நகரங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணை அம்பாள் நகரைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தொற்று பாதித்த சிறுவன் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா பரவல் அதிகரிப்பதால் பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தி வரும் நிலையில் தற்போது சிறுவனுக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.