புவனகிரியில் கழிவறையில் குழந்தை பெற்ற 11ஆம் வகுப்பு மாணவி! 10ம் வகுப்பு மாணவன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு!

0
63

கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் இருக்கின்ற கழிவறைக்கு அருகே இறந்த நிலையில், ஆண் குழந்தை சடலம் கடந்த வெள்ளிக்கிழமை தென்பட்டது. பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில், குழந்தை உயிரிழந்து கிடந்தது. இதனை கவனித்த மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவிக்க, அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புவனகிரி காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்தனர். அதன் பிறகு குழந்தையின் சடலத்தை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு தான் இந்த குழந்தை பிறந்திருக்கிறது என்பது விசாரணையில் தெரிய வந்தது.

அந்த மாணவி தொடர்பான விவரங்களை கண்டறிந்த காவல்துறையினர், அவருடைய வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். மாணவியின் உறவினரின் மகன் 10ம் வகுப்பு படிக்கும் நிலையில், அவர் தான் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் என்பதும், தெரிய வந்திருக்கிறது.

சம்பவத்தன்று வயிற்று வலி ஏற்பட்டதால் கழிவறைக்கு சென்ற மாணவிக்கு இறந்த நிலையில், குழந்தை பிறந்துள்ளது. என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தையை கழிவறையின் பின்புறம் தூக்கி வீசி விட்டு சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமான 10 ம் வகுப்பு மாணவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த மாணவியை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.