திடீரென தீப்பற்றிய மாநகர பேருந்து! பயணிகள் அலறியடித்து ஓட்டம்

0
135
#image_title

திடீரென தீப்பற்றிய மாநகர பேருந்து! பயணிகள் அலறியடித்து ஓட்டம்

சென்னை மாநகரில் உள்ள பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு 102 என்ற வழிடத்தட எண் கொண்ட மாநகர பேருந்துகள் நிறைய இயக்கப்பட்டு வருகின்றன.அந்த மார்க்கத்தில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றில் திடீரென தீ பற்றி எரிந்ததாக தற்பொழுது செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய அந்த பேருந்து அடையாறு அருகே உள்ள எல்.பி சாலையை கடக்கும் போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. பேருந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென கியர் பாக்ஸ் பகுதியில் புகை வந்துள்ளது. இதைப்பார்த்த ஓட்டுனரும், நடத்துனரும் உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுள்ளனர்.

பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில் பேருந்து முழுவதும் மலமலவென தீ பரவி முற்றிலும் எரிந்துள்ளது. இதனையடுத்து அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பட்டபகலில் பேருந்து தீப்பிடித்து எரிந்த இந்த சம்பவத்தை அந்த ரோட்டின் வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள மக்கள் நேரில் சென்று அந்த இடத்தை பார்ப்பதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதனை சரி செய்ய போக்குவரத்து மற்றும் மாநகர காவல் துறை அதிகாரிகள் பலர் அந்த இடத்தில முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

பேருந்தில் புகையை கவனித்த ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.