மாநிலத்தில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரிக்கிறது! அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

0
83

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் சென்னையிலும், திண்டுக்கல்லிலும், , துப்பாக்கிகளை கொண்டு நடத்தப்பட்ட கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் பொதுமக்கள் இடையில் மிகப் பெரிய அதிர்ச்சியையும், அச்சத்தையும், உண்டாக்கியிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கும்போது தமிழகத்தின் அமைதியையும், வளர்ச்சியையும், சீர்குலைத்து விடும் அந்த முயற்சிகளை அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் கள்ளத் துப்பாக்கிகள் தாராளமாக கிடைக்கப்பெறுகின்றன என்பதையே இந்த நிகழ்வுகள் கண்கூடாக காட்டுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் குளங்களில் மீன்பிடி உரிமையை எடுப்பதில் குழு மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்துவிடுகிறது, அந்த மோதல்கள் தற்சமயம் துப்பாக்கிச் சூடு நடத்தி எதிரிகளை கொல்லும் அளவுக்கு கொடூரமான இருப்பது மிகவும் ஆபத்தான போக்கு ஆகும். இது தடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் சில வருடங்களாகவே கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது என்பதை காவல்துறையின் புள்ளிவிவரங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம். துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு உடனடியாக முடிவு கட்டாவிட்டால் சிறிய குற்றங்களுக்கு கூட துப்பாக்கிகளை பயன்படுத்தி செய்யும் நிலைக்கு வந்துவிடும். தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிவதற்கான உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.