தவறு செய்பவர்கள் யாராயினும் தயவு தாட்சண்யம் வேண்டாம்! முதலமைச்சர் அதிரடி பேச்சு!

0
61

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள், வனத்துறை அலுவலர்கள், உள்ளிட்டோர் பங்கேற்கும் 3 நாட்கள் மாநாடு ஆரம்பமானது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ் கே பிரபாகர், காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றார்கள்.

எல்லோரையும் வரவேற்று தலைமைச் செயலாளர் இறையன்பு வரவேற்புரையாற்றினார். அதன்பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றியபோது தெரிவித்ததாவது, 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு நாங்கள் வழங்கியிருக்கிறோம். அவற்றில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் தற்சமயம் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தார்.

மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக தான் இந்த ஒருங்கிணைப்பு மாநாடு நடைபெறுகிறது என தெரிவித்திருக்கிறார்.

புதிய முதலீடுகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, 1 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் என்ற பல இலக்குகளை அடைந்து மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்ய சட்டம் ஒழுங்கு மிக, மிக அவசியம். சட்டம்-ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போதைப்பொருள் குற்றங்கள் பொருளாதார குற்றங்களை அரசு எப்போதும் அனுமதிக்காது மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடிய விதத்தில் யார் செயல்பட்டாலும் எந்தவிதமான தயவு தாட்சண்யமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சாதிய மோதல்கள் உண்டாக வாய்ப்பு உள்ள பகுதிகளில் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. நாசகார சக்திகள் எந்த வடிவத்திலும் தலைதூக்க நாம் அனுமதித்து விடக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.

அனைவரும் ஓர் இனம் அனைவரும் ஓர் குலம் என்ற சமத்துவ சமூகமே நம்முடைய அரசின் குறிக்கோள். கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, மோசடி ,நில அபகரிப்பு உள்ளிட்ட பொது மக்களை பாதிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை தடுப்பதில் காவல்துறை எந்தவிதமான பாரபட்சமும் காட்டக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கிற்கும், பொது அமைதிக்கும், குந்தகம் விளைவிக்கும் விதத்தில் சட்ட விரோத சக்திகளை மற்றும் கூலிப்படைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். நீங்கள் ஏற்படுத்தும் அமைதியில் தான் எல்லாம் அடங்கியுள்ளது என்று தெரிவித்து இருக்கிறார்.

அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பதால் அதனை குறைப்பதற்காக தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையில் பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து பொதுவான கோரிக்கை மற்றும் தனிநபர் கோரிக்கை என்று தரம்பிரித்து போதுமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மாவட்டம், வட்டம், வட்டாரம் மற்றும் கிராமம் என்ற அளவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளை குறுகிய காலத்தில் செய்யாமல் இருப்பதால் பெரும்பாலான மக்கள் கண்ணீருடன் தலைமைச் செயலகத்திற்கு மனுக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை கருணையுடன் பரிசீலனை செய்து விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர்.

நம்முடைய அரசு கையில் எடுக்கும் திட்டங்களால் பயன்பெறும் பயனாளிகளின் விவரங்கள் துறைவாரியாக தொகுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் என்னுடைய கனவு திட்டமாக இருக்கும் நான் முதல்வன் திட்டத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நீங்கள் இந்த உயரத்தை அடைய யாரோ ஒருவர் தூண்டுகோலாக இருந்ததைப் போல நீங்களும் தமிழக மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், வழிகாட்டிகளாக மாறி ஊக்கப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

எல்லோரும் நேர்மையாக ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மையுடன் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும் அவ்வாறு செயல்படும் உங்களுக்கு இந்த அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

உங்களுடைய மாவட்டத்தில் டாஷ்போர்டு ஒன்றை ஏற்படுத்தி சட்டம்-ஒழுங்கு குறித்த கூட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள் முறையாக நடைமுறைப் படுத்தப் படுகிறதா? என்பதை ஆராய்ந்து முழுமையாக தீர்வு காண வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளும், குற்றங்களும், நிகழ்ந்து முடிந்த பிறகு அவற்றைத் தீர்ப்பதற்கு புலனாய்வு செய்வதற்கும், எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை விட அவை வராமல் தடுப்பதற்கான முயற்சிகள்தான் மக்களுக்கு மிகுந்த பயனை வழங்கும். இதில் தான் நம்முடைய வெற்றி அடங்கியிருக்கிறது.

ஆட்சியின் மதிப்பீடு சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தான் இருக்கிறது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பது வருங்காலத்திலும், தொடர வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றியிருக்கிறார்.