பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அதன் அடிப்படையில் திருமணம் ஆகாமல் 50 வயதை கடந்த ஏழை எளிய பெண்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்க இருக்கின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் 50 வயதை கடந்த திருமணமாகாத பெண்கள் மாதம்தோறும் 400 ரூபாய் உதவித்தொகை பெற முடியும். அந்த தொகை தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பலரும் அறியாத நிலையில் குடும்பத்திலோ அல்லது அக்கம் பக்கத்திலோ திருமணமாகாமல் 50 வயதை கடந்த பெண்கள் இருந்தால் இந்த திட்டத்தை பற்றி உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் தற்போது செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றது.
திருமணமாகாத பெண்கள் ஓய்வூதிய உதவி தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும். அந்த பெண்ணுக்கு திருமணமாகாமல் இருப்பது அவசியம். மேலும் அந்தப் பெண்ணின் வயது 50 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
அந்த பெண் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிபவராக இருந்தால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் மூலமாக உதவித்தொகை பெற சில நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பதாரர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டம், முதியோர் உதவித் தொகை திட்டம் போன்ற தமிழக அரசின் மற்ற எந்த ஒரு ஓய்வூதிய திட்டத்திற்கும் விண்ணப்பித்திருக்கக் கூடாது. மேலும் அரசு ஊழியர் ஆகவோ, வருமான வரி செலுத்துபவராகவும் இருக்கக் கூடாது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம் ,பாஸ்போர்ட், பான் கார்டு ,திருமணமாகாதவர் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்..
நகராட்சி அல்லது பஞ்சாயத்து அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பெற்ற பிறகு அதிகாரிகள் விண்ணப்பத்தையும் ஆவணங்களையும் சரிபார்த்து விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் ஆன்லைனில் பதிவேற்றுவார்கள். விண்ணப்பித்து 30 முதல் 45 நாட்களுக்குப் பிறகு ஒப்புதல் அளிக்கப்படும்..