EPS-க்கு வந்த புதிய சிக்கல்; இரட்டை இலை சின்னம் விவகாரம்..தேர்தல் ஆணையம் மீது பெங்களூரு புகழேந்தி வழக்கு!!

Photo of author

By Madhu

EPS-க்கு வந்த புதிய சிக்கல்; இரட்டை இலை சின்னம் விவகாரம்..தேர்தல் ஆணையம் மீது பெங்களூரு புகழேந்தி வழக்கு!!

Madhu

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் அணிகள் பிரச்சனை தலை தூக்கி உள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு இணைந்த நிலையில் ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

அப்போது அதிமுக இவர்கள்தான் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்க முடிவு செய்த நிலையில் ஓபிஎஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் கடந்த 2022 ஆம் ஆண்டு அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

இதனால் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற தற்காலிக அமைப்பை நடத்தி வருகின்றார். மேலும் இரட்டை இலை சின்னம் அதிமுக பொதுச்செயலாளர் பதவி ஆகியவை தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீது தேர்தல் ஆணையம் அனைத்து தரப்பின் வாதங்களையும் கேட்டது. இந்நிலையில் தமிழகத்தில் ஆறு உறுப்பினர்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பாக இன்பதுரை மற்றும் தனபால் ஆகிய இரு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கடந்த வாரம் புகழேந்தி மனுதாக்கல் ஒன்றை செய்தார். அந்த மனுவில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடும் படிவங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது, மேலும் அவர் அறிவித்துள்ள வேட்பாளர்களை அதிமுக வேட்பாளராக அறிவிக்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கப் போகும் என அனைவரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் இரட்டை இலை சின்ன விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பெங்களூரு புகழேந்தி அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

அதில் இரட்டை இலை, அதிமுக விவகாரம் குறித்து புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டன்படி தனது மனுக்கள் மீது 14 மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை அதனால் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் குறித்தான மனு மீது விசாரணை விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.