முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடும் அண்ணாமலை! தனித்துப் போட்டியிடுகிறதா பாஜக?

0
52

சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக 4 இடங்களை கைப்பற்றியது. இந்த சூழ்நிலையில், தற்போது நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

வார்டு பங்கீடு குறித்து அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து உரையாற்றியிருக்கிறார்கள். 30 சதவீத இடங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தொடக்கம் முதலே பாஜக கோரிக்கை வைத்தது.

அதோடு கோயம்புத்தூர் மாநகராட்சி உள்ளிட்ட முக்கிய நகராட்சிகளையும் கேட்டதாகச்சொல்லப்படுகிறது. இதற்கு அதிமுக தரப்பில் எந்தவிதமான ஒப்புதலும் வழங்கப்படவில்லை. இதனை தொடர்ந்து இழுபறி நீடித்ததால் கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவை பாஜக எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், 12 சதவீதம் அளவிற்கு பாஜகவிற்கு இடம் ஒதுக்கி கொடுப்பதாகவும், அதிமுக சற்று இறங்கி வந்ததாக தெரிகிறது. ஆனாலும் தொடர்ந்து பாஜக தரப்பில் கூடுதல் இடங்களை கேட்டிருக்கிறார்கள். இருந்தாலும் அதிமுக சம்மதம் தெரிவிக்காத சூழ்நிலையில், கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவை பாஜக எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை மாநகராட்சி உட்பட ஒரு சில நகராட்சிகளுக்கான பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவுள்ளார் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் உரிமையை கட்சித் தலைமை மாநில தலைவர் அண்ணாமலை வழங்கியிருக்கிறது. இதன் காரணமாக, அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறும் என்று சொல்லப்படுகிறது.