DMK: சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, கடந்த ஜூன் 16ம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிப்பன் பில்டிங் அருகே 13 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த போராட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அனுமதியில்லாத இடத்தில் போராட்டம் நடப்பதாக கூறி, தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னர் போலீசார் போராட்ட இடத்திற்கு திரளாக குவிக்கப்பட்டு, பலரை கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்தச் சூழ்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெற்ற 21வது அமைச்சரவைக் கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, அவர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படுவது, அவர்களின் குழந்தைகளுக்கு உயர் கல்வி ஊக்கத்தொகை, குடும்பத்தினருக்கு சுயதொழில் உதவி, 10 லட்சம் காப்பீடு, 30,000 வீடுகள், மேலும் பணியின் போது உயிரிழந்தால் 10 லட்சம் நிவாரணம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு தூய்மைப் பணியாளர்களுக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் புதிய திட்டத்திற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
ஆரம்ப கட்டமாக, இந்தத் திட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் எனவும், பின்னர் மாநிலத்தின் பிற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முயற்சி, சமூகத்தின் அடித்தட்டு மக்களின் நலனை உயர்த்தும் முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.

