தேவர் குருபூஜையில் பங்கேற்க தமிழகம் வருகிறாரா பிரதமர் நரேந்திர மோடி! தமிழக பாஜகவின் அதிரடி விளக்கம்!

0
113

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இருக்கின்ற சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி குருபூஜை நடைபெறுகிறது. ஆகவே முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர்கள், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்துவது வழக்கம்.

அத்துடன் சுற்றுவட்டார பகுதி மக்களும் வருகை புரிந்து அஞ்சலி செலுத்தி செல்வார்கள். ஆகவே ஏதாவது சாதி ரீதியான கலவரம் ஏற்படுவதை தடுக்கும் விதத்தில், மாவட்டம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்படும் ,144 தடை உத்தரவு போடப்பட்டு எல்லை பகுதியில் காவல்துறையினரின் கண்காணிப்பு தீவிர படுத்தப்படும்.

இதற்கு நடுவே ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருக்கின்ற பசும்பொன் கிராமத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 30ஆம் தேதி பயணமாகிறார் என்று அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்துள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவருடைய நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்துகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அத்துடன் அன்றைய தினம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதாக தகவல் வெளியானது. இதற்கு முன்னதாக தமிழக பாஜகவின் சார்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இது தொடர்பாக இதுவரையில் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக உலா வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். கட்சியில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பே இறுதியானது என்று தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.