ஆன்லைன் மூலமாக கல்வி கற்பித்தலை எதிர்த்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய வினோத போராட்டம்

ஆன்லைன் மூலமாக கல்வி கற்பித்தலை தடை செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பள்ளிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக மாணவ மாணவிகளுக்கு பாடங்களை நடத்தி வருகின்றன.ஆனால் இவர்கள் கற்கும் கல்வியை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் கற்பதற்கு சுமார் 6 மாத காலம் ஆகிவிடும்.

இது அரசின் சமச்சீர் கல்விக் கொள்கைக்கு எதிரானது. இந்த கல்விமுறை சமச்சீர் அற்ற நிலையை உருவாக்கும். இதனால் அரசு பள்ளி மாணவர்கள் முற்றிலும் பாதிக்கப்படுவார்கள். மேலும், ஆன்லைனில் கல்வி கற்க அதிக நேரம் மாணவர்கள் செல்போன் அல்லது மடிக்கணினியில் செலவிட வேண்டிய நிலை உள்ளது.

இதனால் அவர்களுக்கு அதிக மன அழுத்தமும், உடல் சோர்வும் ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோல் தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும் கல்வி கற்கும் நிலை உள்ளதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இது மன அழுத்தத்தை உருவாக்கி உள்ளது.

எனவே ஆன்லைன் கல்வி முறையை தடை செய்ய வேண்டும், 3 ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்தினை மத்திய, மாநில அரசுகள் செலுத்த வேண்டும், அனைத்து பள்ளிகளையும் தேசியமயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் திருவோடு ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மகேஷ் குமார், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து தங்களது கோரிக்கை அடங்கிய மனுவினையும் கோட்டாட்சியர் விஜயாவிடம் வழங்கினர்.