சென்னையில் மருத்துவர்களை அலறவிடும் நோய் தொற்று பாதிப்பு!

0
73

தமிழ்நாட்டில் சென்ற மாதம் வரையில் குறைந்து வந்த நோய் தொற்று பாதிப்பு ஒரு சில நாட்களாக மின்னல் வேகத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை தடுப்பதற்காக தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நீரிழிவு நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்தபோது மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை அறையிலிருந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை சார்பாக நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

மேலும் அந்த அறுவை சிகிச்சை அரங்கில் இருந்தவர்கள் உடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்டோர் முதற்கொண்டு சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களை பரிசோதனை செய்ததில் 97 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் 64 பேருக்கு எஸ் ஜீன் குறைபாடு இருப்பதாக சொல்லப்படுகிறது, மருத்துவர்களிடையே இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த சூழ்நிலையில் ,சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் புத்தாண்டை முன்னிட்டு அவருடைய சொந்த ஊர்களுக்கும், சிலர் நண்பர்களுடனும், சுற்றுலாவுக்கு சென்று வந்தார்கள். விடுமுறை முடிவடைந்து கடந்த 4ஆம் தேதி அவர்கள் மறுபடியும் மருத்துவமனைக்கு திரும்பினார்கள். அப்போது அவர்கள் எல்லோருக்கும் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களுடைய பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 30 மாணவர்கள் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். இவர்கள் எல்லோரையும் தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகிறார்கள்.

அத்துடன் தற்சமயம் எல்லா மாணவர்களும் நலமுடன் உள்ளதாகவும், எல்லோரும் முதன்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள். அதோடு இவர்களுக்கு புதிய வகை நோய் தொற்று அறிகுறி உள்ளதா? என்பதை கண்டறிவதற்காக இவர்களுடைய மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் மருத்துவர்கள் செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள், என்று 11 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 14 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த சூழ்நிலையில், தற்சமயம் கீழ்ப்பாக்கத்தில் நோய்த்தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்திருக்கிறது.

தலைநகர் சென்னையில் தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவ மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவது மருத்துவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு சென்னையில் நாளொன்றுக்கு 5ற்கும் அதிகமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்படுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.