ADMK DMK: தமிழகத்தில் இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். நேற்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இது தமிழக அரசின் அலட்சியத்தின் விளைவு. மருந்து உற்பத்தி நிறுவனத்தில் ஏற்கனவே முறைகேடு கண்டறியப்பட்டு தண்டனையும் விதிக்கப்பட்டது. அதே நிறுவனம் மீண்டும் சட்டவிரோதமாக செயல்பட்டும், 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் அரசு எந்தச் சோதனையும் நடத்தவில்லை. அரசு கண்காணிப்பில் கடுமையான குறைபாடே இவ்வளவு உயிரிழப்புகளுக்கு காரணம் என்றார். மேலும் அவர், சிறுநீரக முறைகேடு தொடர்பாகவும் புகார்கள் இருந்தும், அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அமைச்சர் மழுப்பி விடுகிறார்.
திமுக ஆட்சியில் உருட்டுக் கடை அல்வா தான் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 2021 தீபாவளியின் போது முதல்வர் ஸ்டாலின் 525 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை. ஆனால் மக்கள் அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார் என சாடினார். அத்துடன், விவசாயிகளை ஏமாற்றும், தொழில்துறை வளர்ச்சியில் வெற்றிடத்தை உருவாக்கும் அரசாக திமுக மாறிவிட்டதாகவும், முதலீட்டு அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். திமுக அரசில் எல்லாமே வெற்று அறிவிப்பு மட்டுமே என எடப்பாடி பழனிசாமி கடுமையாக குற்றம் சாட்டினார்.