தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு செல்ல துவங்கி உள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நோட்டு புத்தகங்கள், பாடநூல்கள் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
மாணவர்களுக்கு புதிய பேருந்து பயண அட்டை வழங்கும் வரை தங்கள் பழைய பேருந்து பயண அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் கொரோனா பெரும் தொற்று பரவாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.