AMMK NDA: தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து முன்னணி தலைவர்கள் பலரும் விலகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிமுகவில் முக்கிய முகமாக அறியப்பட்ட டிடிவி தினகரன் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இபிஎஸ்-யால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அதிமுக, பாஜக உடன் கூட்டணியை அமைத்தது. அப்போது சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோர் கூட்டணியில் இருக்க கூடாது என்று இபிஎஸ் நிபந்தனை விதித்தார். ஆனால் அப்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது அவர் கூறியபடி NDA கூட்டணியிலிருந்து ஒவ்வொருவராக விலகி வருகின்றனர்.
இந்த பிரிவு பாஜக தலைமையின் அழுத்தத்தால் அல்ல என்றும், நாங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கு தற்போதைய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தான் காரணம், அவர் இபிஎஸ்-க்கு சாதகமாக செயல்படுகிறார் என்று டிடிவி தினகரனும், ஓபிஎஸ்-ம் கூறினார்கள். இதனை தொடர்ந்து NDA கூட்டணியில் இணையும் படி பலரும் இவர்களிடம் கேட்டனர்.
ஆனால் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை நாங்கள் கூட்டணியில் இணைய மாட்டோம் என்று டிடிவி தினகரன் உறுதியாக இருந்தார். அண்ணாமலைக்கும், தனக்கும் நல்ல நட்புறவு உள்ளதாக பலமுறை தினகரன் கூறியுள்ளார். இதனால் அண்ணாமலை அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினால் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது என்று நினைத்த டெல்லி தலைமை அவரை அனுப்பியது.
அப்போதும் டிடிவி தினகரன் மறுத்து விட்டார். இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூட்டணியின் தலைமையை அதிமுக வகிப்பதில் எந்த வித பிரச்சனையும் இல்லை, ஆனால் யார் சொன்னாலும் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை, அமமுக NDA கூட்டணியில் இணையாது என்று திட்டவட்டமாக கூறினார்.