மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி, கட்சியின் மாநிலங்களவை வேட்பாளர்களாக இன்ப துரை, செய்யூர் தனபால் ஆகியோரை அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் எனவும் வரும் 2026 ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட்டு தரப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தேமுதிகவை பொறுத்த வரை அனைத்து நிகழ்வுகளையும் அரசியல் நிகழ்வாக தான் பார்க்கிறோம், 2026 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் மாநாடு எங்களுடைய நிலைப்பாடு கூட்டணி எல்லாவற்றையும் அறிவிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் அடுத்த சில நாட்களில் 234 தொகுதிகளுக்குமான பொறுப்பாளர்களை நியமிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் திமுக பொதுக் குழுவில் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளதற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம், அரசியல் என்பது தேர்தலை நோக்கி தான் செல்கிறது. அரசியல் என்பதே தேர்தலை ஒட்டிதான் அதுதான் எங்கள் நிலைப்பாடு என பிரேமலதா விஜயகாந்த் கூறி இருக்கின்றார். திமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்ப்பது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது. இந்த பேச்சு வார்த்தையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.
அதிமுகவுக்கு பிடி கொடுக்காமல் பிரேமலதா விஜயகாந்த் பேசியிருக்கின்றார். அதனால் திமுக கூட்டணியை நோக்கி தேமுதிக நகர்கிறதா என அரசியல் வட்டாரம் பேசி வருகின்றது.