TVK DMK DMDK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வரும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியதன் மூலம் தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களை தவெகவில் இணைந்துள்ளார். 2 மாபெரும் மாநாடுகளை நடத்திய அவர், மக்களை சந்திக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனை தொடர்ந்து கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.
இந்த இழப்புகள் நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது. இதனை தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு திமுக தான் காரணம் என்று தவெக தொண்டர்களும், தவெக நிர்வாகிகளின் அலட்சியம் தான் காரணம் என்று திமுக தொண்டர்களும் மாறி மாறி குறை கூறி வந்தனர். இதனை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் ஆணையமும் அமைத்துள்ளது. இந்நிலையில் கரூர் சம்பவம் குறித்து எந்த கருத்தையும் கூறாமல் இருந்த தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தற்போது அதனை பற்றி மனம் திறந்துள்ளார்.
தேமுதிக சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தலைப்பில் கிருஷ்ணகிரியில் போது கூட்டம் நடைப்பெற்றது அப்போது பேசிய அவர், கரூரில் ஏற்பட்ட விபத்துக்கு தமிழக அரசும், விஜய்யும் தான் முழு காரணம் என்று கூறி இருந்தார். ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு செல்லும் விஜய்யால், பிரச்சாரத்திற்கு செல்ல முடியாதா என்றும், விஜய் தாமதமாக வந்ததே அவர் செய்த மிகப்பெரும் தவறு என்றும் கூறினார். விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண தொகையை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்தார். அவ்வளவு மக்கள் கூடி இருந்த இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தான் கூட்ட நெரிசல் அதிகம் ஏற்பட்டது என்றும் கூறியிருந்தார். இதற்கு முன் எத்தனையோ இழப்புகள் நிகழ்ந்துள்ளது. அதற்கெல்லாம் நேரில் செல்லாத முதல்வர் இதற்கு மட்டும் தனி விமானத்தில் வந்துள்ளார். எல்லாம் அரசியல் என்றும் விமர்சித்துள்ளார். கரூர் சம்பவத்தை பல அரசியல்வாதிகளும் அரசியலாக்க முயன்று வரும் வேளையில் பிரேமலதா விஜயகாந்தின் இந்த பேச்சு அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.