ரவுடிகளின் அராஜகம்.. கும்பகர்ண தூக்கத்தில் விடியா அரசு – எடப்பாடி பழனிசாமி விளாசல்!!

Photo of author

By Priya

ரவுடிகளின் அராஜகம்.. கும்பகர்ண தூக்கத்தில் விடியா அரசு – எடப்பாடி பழனிசாமி விளாசல்!!

Priya

Edappadi K. Palaniswami

Edappadi K. Palaniswami: கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக கூறி மயிலாப்பூரைச் சேர்ந்த சைக்கோ சரண், மற்றும் மந்தவெளி சேர்ந்த போண்டா ராஜேஷ், தினேஷ் ஆகிய மூன்று ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை பரிசோதிப்பதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவலர்கள் அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சைக்கோ சரண், தினேஷ், ராஜேஷ் ஆகியோரை விடுவிக்க வேண்டும் எனக் கூறி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புகுந்த ரெளடி கும்பல் அங்கிருந்த மருத்துவ உபகரணங்களை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இவர்களை காவல்துறையினர் தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ரவுடி கும்பல்கள் அரசு மருத்துவமனையில் புகுந்து மருத்துவ உபகரணங்களை அடித்து நொறுக்கியதோடு மட்டுமல்லாமல் போதையில் அவர்களை விடுவிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வோம் என மறைத்து வைத்திருந்த பிளேடால் தங்களின் உடல்களைக் கீறி அனைவரையும் பயமுறுத்தி உள்ளனர். இதனை கண்ட அங்கிருந்த செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் சிகிச்சைக்காக வந்தவர்கள் என அனைவரும் பதறி ஓடினார்கள்.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிவிப்பில் வெளியிட்டுள்ளதாவது, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கஞ்சா மற்றும் கொலை வழக்கில் கைது செய்ததற்கு எதிர்ப்பாக ரவுடி கும்பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கண்ணாடிகளை சேதுப்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் கண்டனத்திற்குரியது.

போதை பொருள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடே அடையாள அட்டையாக திகழும் இந்த விடியா திமுக ஆட்சியில் பொதுமக்கள் மருத்துவ உதவி பெற வரும் அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இன்றைக்கு நிலவுகிறது.

இந்த விடியா திமுக அரசின் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு முறை சுட்டிக்காட்டி வந்ததும் அதனை சீர் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கேளாதார் காதில் சங்கு ஊதிய கதையாக கும்பகர்ண தூக்கத்தில் உள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், சேதமடைந்த மருத்துவ உபகரணங்களை உடனடியாக சீர் செய்வதுடன் தாக்குதல் நடத்திய ரவுடி கும்பல் மீது தக்க சட்ட நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டு இனியாவது சட்டம் ஒழுங்கைக்காக ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என அவர் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: மூன்றாவது முறையாக பிரதமரான நரேந்திர மோடி! வாழ்த்துக்கள் கூறிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்!