முக கவசம் அணியாதோருக்கு அபராதம் ஒரே நாளில் 2 லட்சத்தை கடந்த வசூல்! சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

0
82

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா மற்றும் புதிய வகை நோய் தொற்று அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியது. சென்னையில் 15 மண்டலங்களில் தலா மூன்று குழுக்கள் வீதம் அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் குழுக்களில் காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளிட்டோர் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். சென்ற 31ம் தேதி முதல் மூன்றாம் தேதி வரையில் முக கவசம் அணியாத 2608 பேரிடம் இருந்து 5.48 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக சென்னையில் அதிகமாக பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களான வணிக வளாகங்கள், திரையரங்குகள், உள்ளிட்ட பொது இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அந்த விதத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் முக கவசம் அணியாத 1022 பேரிடம் 2.18 லட்சம் அபராதம் வசூலிக்க பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்திருக்கிறார்.