தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த வாரத்தில் இருந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார். அரசு ஊழியர்களுக்கு கட்டணம் இன்றி ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு போன்ற அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்காக சுமார் 9 அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் ஒன்றாக ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை காலம் முன்பணம் 4000 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத்தொகை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பின்படி தமிழ்நாடு அரசு மாநில சிவில் மற்றும் ஆசிரியர் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பண்டிகை காலம் முன்பணம் 4000 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராம பணி அமைப்பு உள்பட சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்கள் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அரசால் வழங்கப்படும் பரிசுத்தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பண்டிகை முன்பணம் 10 மாதங்களுக்கு சமமான தவணைகளில் பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.