இந்த காளைகளுக்கு மட்டும்தான் ஜல்லிக்கட்டில் அனுமதி! தமிழக அரசு விதித்த அதிரடி நிபந்தனை!

0
63

நோய்தொற்று பரவலுக்கு நடுவே தமிழகத்தில் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியிருக்கிறது. காளைகள் உரிமையாளர் மற்றும் பார்வையாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அதே நேரம் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முழு பரிசோதனை செய்து நோய் தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு சார்பாக விதித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கால்நடை பராமரிப்புத்துறை தனியாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்டு இருக்கின்ற செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் ஆணையர் மாநில அளவில் ஜல்லிக்கட்டு மேற்பார்வை குழு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை மேற்பார்வையிட வேண்டும். மாவட்ட நிர்வாகம் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கொண்டு குழு அமைத்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறது.

உதவி மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து ஜல்லிக்கட்டு நடத்த போதுமான இடவசதி இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். காளைகள் அனைத்தும் கட்டாயமாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவை உள்நாட்டின் காளைமாடுகள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறது. அதாவது நாட்டு மாடுகள் மட்டுமே இதில் பங்கேற்கலாம் என்பதே இதன் சூட்சுமம்.

அதோடு சோர்வாக நிதானமின்றி இருக்கின்ற காளைகளை ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கக் கூடாது குறிப்பாக காளைகளுக்கு மதுபானம் கொடுக்கப்பட்டுள்ளதா? என ஆராய்ந்து அது போன்ற காளைகளை போட்டியில் பங்கேற்க விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும், கால்நடை அவசர மருத்துவ ஊர்தி தயார்நிலையில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை சார்பாக மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் மது போதையில் இருப்பவர்களை போட்டியில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை பொதுப்பணித் துறையைச் சார்ந்தவர்கள் ஆய்வு செய்து பார்வையாளர்களுக்கும், நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கும், இடையே 8 அடி உயரமுள்ள இரட்டை தடுப்பு அமைப்பு அமைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்து சான்றளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா மூலமாக விதிமீறல்கள், விலங்குகள் துன்புறுத்தல்கள் நடக்காத விதத்தில் கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு விழா குழுவைச் சார்ந்தவர்கள் முறையாக விண்ணப்பம் செய்து முன் அனுமதி பெற்று உரிய அரசு துறைகளுடன் ஒத்துழைத்து மேற்கூறப்பட்டு இருக்கின்ற அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மேற்கண்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.