இரவு நேர ஊரடங்கின் போது காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட டிஜிபி சைலேந்திரபாபு!

0
195

மத்திய மாநில அரசுத் துறை அதிகாரிகள், ஊழியர்கள், நீதிமன்றம் ,நீதிமன்றம் தொடர்பான பணியில் ஈடுபடுவோர், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோர், வங்கி, பொது, போக்குவரத்துத்துறை உள்ளிட்டவற்றின் அலுவலுக்காக பயணம் செய்வோர் உரிய அடையாள அட்டை காண்பித்தால் அவற்றை பார்வையிட்டபின் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இரவு நேர ஊரடங்கில் காவல்துறையினர் கடைபிடிக்கவேண்டிய வழி காட்டு நெறிமுறைகள் தொடர்பான அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம் செய்வது, மின்சாரம், தகவல் தொடர்பு, தினசரி பத்திரிக்கை வினியோகம், மருத்துவம்,மருத்துவம் சார்பான அனைத்து சேவை மையங்கள், சரக்கு மற்றும் எரிபொருள் வாகனங்களில் பணி புரிவோரின் அடையாள அட்டையை பார்வையிட்டு உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்படும் விவசாய விளைபொருட்கள், காய்கறி, பழங்கள், கறிக்கோழிகள், முட்டை உள்ளிட்ட பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை எந்த காரணத்தை முன்னிட்டும் தடை செய்யக்கூடாது. மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சரக்கு லாரிகளை இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உற்பத்தி தொழிற்சாலைகள் தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனப் பணியாளர்கள் அடையாள அட்டையை காட்டினால் பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் டிஜிபி சைலேந்திரபாபு.

ஞாயிறு முழு ஊரடங்கும் போது உணவகங்களில் பார்சல் சேவைகளை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்க வேண்டும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவன பணியாளர்களை மேலே குறிப்பிடப்பட்ட சமயத்தில் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என்றும், தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய, மாநில, அரசுப் பணியாளர்கள் தேர்வாணைய நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளுக்கு செல்வோர் உரிய அழைப்பு கடிதத்தை காட்டினால் அனுமதிக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமையான நாளைய தினம் முழு ஊரடங்கின் பொது மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

விமானம், தொடர்வண்டி மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்லும் பயணிகளையும், அவற்றில் இருந்து வீடுகளுக்குச் செல்லும் பயணிகளையும், அனுமதிக்க வேண்டும். இவர்கள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கிராமப்புறங்களில் விவசாயிகள் விவசாய பணிகளுக்காக செல்பவர்களை அனுமதிக்க வேண்டும், அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர் பணிகளை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு செல்பவர்களை அனுமதிக்க வேண்டும். வாகன சோதனை செய்ய வேண்டியிருந்தால் கையுறை அணிந்து கொள்ள வேண்டும், கிருமிநாசினி மூலமாக அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாகன சோதனை செய்யும் போது வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இரவு வாகன சோதனை உள்ளிட்டவற்றை வெளிச்சம் உள்ள இடங்களில் வைத்து நடத்தவேண்டும். காவல்துறையினர் தடுப்பான்கள் அமைத்து ஒளிரும் மேல் சட்டை அணிந்து பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Previous articleஅதிர்ச்சி சம்பவம் காரில் கிடந்த 10 பிணங்கள்! காரணம் யார்? நடந்தது எப்படி?
Next articleஇவர்களுக்கெல்லாம் நிவராண தொகை! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here