பருவம் தவறிய கனமழையால் அறுவடை பணிகள் பாதிப்பு! டெல்டா மாவட்ட மக்கள் வேதனை!

0
71

குமரி கடல் பகுதியின் மேல் நிலவிவரும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழக கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதனடிப்படையில், இன்று டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது என்று சொல்லப்படுகிறது.

தஞ்சாவூரை பொறுத்தவரையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது, காலை 8 மணி அளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரம் மழை நீடித்தது தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதன் காரணமாக, எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என்ற சூழ்நிலை இருந்து வருகிறது. அதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக, சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது.

நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நள்ளிரவு முதல் லேசான சாரல் மழை செய்து வருகிறது. விடியற்காலையில் 4 மணி முதல் மிக கனமழை பெய்து வருகிறது. தற்சமயம் நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சம்பா அறுவடை பணிகள் நடந்து வருகிறது என சொல்லப்படுகிறது.

அதோடு செங்கல் சூளை பணிகள் நடந்து வருகிறது இந்த கனமழையின் காரணமாக, சம்பா சாகுபடி பாதிப்படைந்திருக்கிறது இன்று நடைபெறவிருந்த அறுவடை பணிகள் முற்றிலுமாக முடங்கிப் போய் விட்டனர்.

வயல்களில் 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக, மழை நீர் தேங்கி நிற்கிறது. அதோடு செங்கல் சூலை மழைநீரால் பாதிப்படைந்திருக்கிறது.நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது இது விவசாய பெருங்குடி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு, நாகப்பட்டினம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வேதாரண்யம், கோடியக்கரை, போன்ற பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் ஆங்காங்கே அறுவடை செய்யும் பணி நடந்து வந்தது.

இந்த திடீர் மழையின் காரணமாக, அறுவடை பணி முற்றிலுமாக முடங்கிப் போயிருக்கிறது. அதோடு உப்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டத்திலும், பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டிருக்கிறது இன்று காலை 8 மணி நிலவரத்தின் அடிப்படையில், 69.6 மில்லிமீட்டர் மழை பெய்திருக்கிறது.

அதேபோல தலைஞாயிறு பகுதியில் 23.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து மழை பெய்தாலும் காற்றின் வேகம் குறைவாக உள்ளதால் மீனவர்கள் வழக்கம்போல கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருக்கிறார்கள்.