ADMK: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அதிமுக ஒன்றிணைப்பு குறித்து ஊடகங்களில் பரவும் தகவல்கள் தவறானவை என்று தெளிவாகக் கூறியுள்ளார். கோவையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு சென்ற அவரிடம் செய்தியாளர்கள் அதிமுக ஒன்றிணைப்பு தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, விரைவில் நல்லது நடக்கும் என்று மட்டுமே பதிலளித்தார்.
மேலும், நீங்கள் இன்று பங்கேற்க உள்ள திருமண நிகழ்ச்சியில் ஒன்றிணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கலாம்? என்று கேள்வி கேட்ட போது, இதுவரை எதுவும் உறுதியாக நடைபெறவில்லை என்று கூறிய அவர், விரைவில் நல்ல முடிவு வரும் என உறுதி செய்தார்.சுமார் 1 மாதத்திற்கு முன்பு அதிமுக ஒன்றிணைப்பு தொடர்பாக இபிஎஸ்க்கு பத்து நாள் கெடு விதிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, நான் எந்த கெடும் விதிக்கவில்லை.
பத்து நாளில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும், முடிவெடுக்கும் நேரம் ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதமாக இருக்கலாம் என்று தான் கூறினேன் . ஆனால் ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளன என்றார். செப்டம்பர் மாத தொடக்கத்தில் கோபி புறநகர் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், செங்கோட்டையன் பிரிந்து சென்றவர்கள் 10 நாட்களில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை நாங்களே மேற்கொள்வோம் என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் என்றும், தெரிவித்தார். தற்போது அந்த பேச்சு மீண்டும் ஊடகங்களில் விவாதமாகவும், தவறான தகவல்களுடன் பரவியதால் செங்கோட்டையன் தமது கருத்தை நேரடியாக தெளிவுபடுத்தி, அதிமுக ஒருங்கிணைப்பில் சரியான முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளார்.

