நாயகனுக்கு பின் 36 வருடங்கள் கழித்து மணிரத்னமும், கமலும் தக் லைப் படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஏனெனில்., கமல் நீண்ட தலைமுடியுடன் சண்டை செய்யும் காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தது.
எனவே, படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் போன்ற நடிகர்கள் நடிப்பதாக செய்திகள் வெளியானது. அதன்பின் அவர்கள் அப்படத்தில் நடிக்கவில்லை, சிம்பு நடிக்கிறார் என செய்திகள் வெளியானது. கமலுடன் சிம்பு நடிக்கிறார் என்றதும் ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்ப்பு எகிறியது.
படப்பிடிப்பு துவங்கி வேகமாக நடந்து வந்தது. வழக்கம்போல் மணிரத்னத்தின் இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைத்துள்ளார். மேலும், நாசர், அபிராமி, திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் முடிந்து இப்போது ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. வருகிற ஜூன் 5ம் தேதி படம் ரீலீஸ் என அறிவித்துவிட்டனர்.
சமீபத்தில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பும் சென்னையில் நடந்தது. அதேபோல், படத்தின் இசை வெளியீட்டு விழாவும் விரைவில் சென்னையில் நடக்கவுள்ளது. இந்நிலையில், முழு படத்தையும் பார்த்த கமல் சிம்புவிடம் ‘இந்த படம் துவங்கிய போது என்னுடைய படமாக இருந்தது. படம் முடியும்போது உங்கள் படமாக மாறிவிட்டது’ என சொன்னாராம். கமல் சொல்வதை பார்க்கும்போது தக் லைப் படத்தில் சிம்புவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுகப்பட்டிருக்கும் என்றே கணிக்கப்படுகிறது.