தமிழகம் முழுவதும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளிகளில் தற்போது மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்து வருகின்றது. அதனால் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது மற்றும் இலவச சீருடை ,புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.
ஆனால் ஒரு சில பகுதிகளில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது மிக மிக குறைவாக இருப்பதினால் அப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகை மண்டலம் அருகே கீழூர் என்ற பகுதியில் உள்ள கோக்கலாடா அரசு உயர்நிலைப் பள்ளியும் தொடக்கப் பள்ளியும் அமைந்திருக்கின்றது. இங்கு மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கின்றது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளி மூடப்பட்ட நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது.
ஆனால் தற்போது அந்த பள்ளியில் 42 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை எந்த வகுப்பில் சேர்ந்தாலும் அவர்களுடைய வங்கி கணக்கில் 5000 ரூபாய் வரவு வைக்கப்படும், 7 ஆம் வகுப்பு வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 4000 ரூபாயும், 8 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 3000 ரூபாயும் 9ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 2000 ரூபாயும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்து செல்லும் பொழுது இந்த டெபாசிட் முதிர்வுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த சலுகை குறித்து துண்டு பிரசுரங்கள் அச்சிடப்பட்டு வீடு வீடாக ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர்.