கனமழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட மலை ரயில் சேவை!

0
59

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் மேட்டுப்பாளையம், ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு உண்டானது தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தனர்.

ஆகவே வழக்கம் போல நேற்று காலை 7.10 மணியளவில் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு 140 சுற்றுலா பயணிகளுடன் மலைரயில் புறப்பட்டு சென்றது. கல்லாறு தொடர்வண்டி நிலையத்தை அடைந்தபோது, பாதையில் உண்டான மண் சரிவு தொடர்பாக தெரிய வந்தது.

உடனடியாக ரயில் பாதி வழியில் கல்லாறு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் மலை ரயில் மறுபடியும், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதன் காரணமாக, சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

மண் சரிவு காரணமாக, மேட்டுப்பாளையம் ஊட்டி மற்றும் ஊட்டி மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நேற்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்பட்டது, என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. மேட்டுப்பாளையம் ரயில்வே தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள்.

தண்டவாளத்தில் கிடந்த பெரிய மற்றும் சிறிய பாறாங்கற்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. ரயில் பாதையை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் முடிவடையவில்லையென்பதால் மலை ரயில் சேவை இன்றும், ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் கூறியிருக்கிறது.