தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய ஆஞ்சநேயர் சிலை எங்கு இருக்கிறது தெரியுமா?

0
86

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட தலைநகராக இருக்கும் நாமக்கல் நகரத்தில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த கோவிலுக்கு கோபுரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. நாமக்கல் மலைக்கோட்டை இங்கே நரசிம்மர் கோவிலும் நாமகிரி தாயார் அருள்பாலித்து வருகிறார்கள். இவர்களை வணங்கியது போல ஆஞ்சநேயர் தனிக்கோயிலில் காட்சி தந்து கொண்டிருக்கிறார். ஸ்ரீ நரசிம்மர் அனுமனுக்கும், லட்சுமிதேவி அவர்களுக்கும், காட்சியளித்த இடமாக இந்த ஸ்தலம் விளங்கிவருகிறது. இங்கே அமைந்திருக்கின்ற ஆஞ்சநேயரின் உயரமானது 18 அடி என்று தெரிவிக்கப்படுகிறது. பிரம்மாண்டமாக இந்த சிலை காட்சி அளிக்கிறது. தமிழகத்தின் மிகப் பெரிய ஆஞ்சநேயர் சிலை இதுதான் என்று சொல்லப்படுகிறது.

ராமாயண காலத்தில் சஞ்சீவினி மூலிகையை பெறுவதற்காக இமயத்திலிருந்து சஞ்சீவினி மலையை பெயர்த்து எடுத்து வந்தார் ஆஞ்சநேயர் என்று எல்லோருக்கும் தெரியும். அந்தப் பணி முடிவுற்ற உடன் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பியிருக்கிறார். அவ்வாறு வருகை தரும்போது அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்திருக்கிறார். அந்த சமயத்தில் சூரியன் உதயமான காரணத்தால் அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஆஞ்சநேயர் தன்னுடைய கையிலிருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சந்தியாவந்தனத்தில் முடித்தார். மறுபடியும் வந்து சாளக்கிராமத்தை தூக்க முயற்சி செய்தார் என்று சொல்லப்படுகிறது.

இருந்தாலும் அதனை அவரால் தூக்க முடியவில்லையாம். ராமனுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்துவிட்டு அதன்பிறகு வந்து என்னை எடுத்துச் செல் என்று ஒரு அசரீரி குரல் கேட்க ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அதே இடத்தில் வைத்துவிட்டு திரும்பி விட்டார். ராமன் போரில் வெற்றிபெற்று சீதையை மீட்ட பின்னர் ஆஞ்சநேயர் மறுபடியும் இங்கே வருகைதந்து ஆஞ்சநேயர் விட்டுச்சென்ற சாலகிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு இன்று நமக்கெல்லாம் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லினால் வடிவமைக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பாக இருக்கிறது. இந்த நகருக்கு சுமார் 10 மைல் தொலைவில் பல மூலிகைகளும், மரங்களும், மற்றும் தானிய வகைகளும், கொண்ட சதுரகிரி என்ற பெருமை கொண்ட கொல்லிமலை இருக்கின்றது. இங்கே ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துவது, எலுமிச்சைபழ மாலை அணிவிப்பது, துளசி மாலை அணிவிப்பது, வடை மாலை அணிவிப்பது, பூ மாலை அணிவிப்பது, போன்றவை நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகின்றன. இதைத் தவிர வெண்ணெய் காப்பு போன்ற சிறப்பு அபிஷேகங்களும் இங்கே செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

பொதுவாக சனீஸ்வரனால் பிடிக்கப்பட்டவர்கள் சனி தோஷம், ஏழரை தோஷம். ஜென்ம சனி, அஷ்டமத்துச் சனி, கண்டச் சனி என்று அவதிபடுபவர்கள் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் வெற்றிலை மாலை, வடை மாலை உள்ளிட்டவற்றை சாற்றி வழிபடுகிறார்கள்.