என் ஐ ஏ அதிரடி 8 மாநிலங்களில் 2வது கட்டமாக சோதனை! 170 பேர் கைது!

0
67

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் தேசிய புலனாய்வு மட்டுமே அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிரடி சோதனையை நடத்தினர். இதில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சார்ந்தவர்களும், எஸ்.டி.பி.ஐ அமைப்பை சார்ந்தவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வாகனங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது.

இந்த பெட்ரோல் குண்டு சம்பவம் மாநில முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பெட்ரோல் குண்டு வீச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

அதோடு இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அறிந்து கொள்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக ஆளுநரை டெல்லி அழைத்தது. அதன் பெயரில் அவர் நேற்று மாலை டெல்லிக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெளிநாட்டு பண பரிமாற்றம் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அந்த புகாரை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக 2வது கட்டமாக 8 மாநிலங்களில் இந்த சோதனை இன்று ஆரம்பமானது.

சென்ற வாரம் தமிழ்நாடு, கேரளா, புதுடெல்லி போன்ற முக்கிய நகரங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 110 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், அசாம், கர்நாடகா போன்ற 8 மாநிலங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மாநில காவல்துறையைச் சார்ந்தவர்களும் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். இன்றைய சோதனையில் மடிக்கணினி, சிடிக்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. அதோடு 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த திடீர் சோதனை நடப்பதற்கான காரணத்தை தேசிய புலனாய்வு அமைப்பினர் இதுவரையில் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.