இனி சீர்வரிசை பொருட்களும் இங்கு கிடைக்கும்! மதுரை சிறை கைதிகளின் அடுத்த முயற்சி! 

0
158
Now serial products are also available here! The next attempt of Madurai jail inmates!
Now serial products are also available here! The next attempt of Madurai jail inmates!
இனி சீர்வரிசை பொருட்களும் இங்கு கிடைக்கும்! மதுரை சிறை கைதிகளின் அடுத்த முயற்சி!
மதுரை சிறைச் சந்தையில் திருமணத்திற்கு தேவைப்படும் சீர் வரிசை பொருட்களையும் வாங்கலாம் என்று மதுரை டிஐஜி பழனி அவர்கள் கூறியுள்ளார்.
மதுரை மத்திய சிறையில் சிறைச் சந்தை செயல்பட்டு வருகின்றது. இந்த சந்தையில் சிறையில் இருக்கும் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றது.
இங்கு உள்ள உணவகம் மற்றும் பேக்கரி மூலமாக உணவுப் பொருட்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் ரெடிமேட் ஆடைகள், பரிசுப் பொருட்கள், காலணிகள் ஆகியவையும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பர்னிச்சர் பிரிவு மூலமாக கட்டில், பீரோ, டைனிங் டேபிள் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் மரம் மற்றும் இரும்பினால் செய்யப்பட்டு மதுரை சிறை சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தஞ்சாவூரை சேர்ந்த செந்தில்குமார் என்ற நபர் தன்னுடைய மகள் திருமணத்திற்கு தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட திருமண சீர்வரிசை பொருட்கள் வேண்டும் என்று மதுரை சிறை சந்தையில் ஆர்டர் கொடுத்திருந்தார். இந்த ஆர்டரை அடுத்து சிறைவாசிகள் தேக்கு மரத்தினை பயன்படுத்தி கட்டில், பீரோ, சோபா, டீ பாய் முதலிய வீட்டு உபயோக பொருட்களை ஆர்டர் கொடுத்தவரின் விருப்பத்திற்கு ஏற்ப குறைந்த விலையில் வெகு நேர்த்தியாக செய்தனர்.
அதன் பின்னர் இந்த திருமண சீர்வரிசை பொருட்கள் அனைத்தும் ஆர்டர் கொடுத்த தஞ்சவூரை சேர்ந்த செந்தில்குமார் அவர்களுக்கு டிஐஜி பழனி மற்றும் சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் மூலமாக கொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக டிஐஜி பழனி அவர்கள் “மதுரை மத்திய சிறைச் சந்தையில் சிறைவாசிகள் மூலமாக செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
இந்நிலையில் தற்பொழுது புதிதாக தொடங்கப்பட்டுள்ள பர்னிச்சர் பிரிவின் மூலமாக கட்டில், பீரோ முதலிய வீட்டு உபயோகப் பொருட்கள் விரும்பிய டிசைனில் குறைந்த விலையில் சிறைவாசிகள் மூலமாக செய்து குறித்த நேரத்தில் கிடைக்கும்படி தருகிறோம்.
ஒரு திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் தற்பொழுது மதுரை சிறைச் சந்தை செயல்பட்டு வருகின்றது. எனவே மதுரை சிறைச் சந்தைக்கு மக்கள் தங்களுடைய ஆதரவை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என்று கூறியுள்ளார்.