அரசு வேலை பெறுவதற்கு பலரும் முண்டியடித்துக் கொண்டு காத்திருக்கின்றனர். காலி பணியிடங்கள் 10 ஆக இருந்தால் கூட லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். ஆனால் அரசு அலுவலகங்களில் இருக்கக்கூடிய ஊழியர்கள் சரியான முறையில் அலுவலகம் முன்பு வருகின்றார்களா என்பதை உறுதி செய்ய புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒடிசா அரசு அலுவலகங்களில் சரியான நேரத்திற்கு ஊழியர் வருவதை உறுதி செய்ய தற்போது பயோமெட்ரிக் வருகை பதிவு தீவிரமாக்கப்பட்டு வருகின்றது. பயோமெட்ரிக் வசதி இல்லாத அலுவலகங்களில் உடனடியாக அதனை நிறுவ வேண்டும் எனவும் ஒடிசா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை நியமிக்கப்பட்ட அதிகாரி பயோமெட்ரிக் வருகை பதிவின் மூலம் அரசு ஊழியர்களின் வருகை பதிவை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் ஊழியர்கள் அலுவலகத்திற்குள் வரும் பொழுதும், அலுவலகத்தில் இருந்து வெளியேறும் பொழுதும் பயோமெட்ரிக் கருவியில் பதிவு செய்ய வேண்டும்.
அலுவலகம் விட்டு வெளியேறும் நேரத்தை ஊழியர்கள் பதிவு செய்ய தவறினால் அன்றைய தினம் விடுப்பாக கருதப்படும். மேலும் சுழற்சி முறையில் வேலை செய்யும் அலுவலகங்களில் தலைமை அதிகாரி ஊழியர்கள் வேலைக்கு வரும் நேரத்தை நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு 30 நிமிடம் தாமதமாக வரும் பட்சத்தில் மூன்று நாட்கள் வரை அவகாசம் கொடுக்கப்படுகின்றது. ஒரு மாதத்தில் மூன்று நாட்களுக்கு மேல் தாமதமாக வந்தால் மூன்று நாட்களுக்கு ஒரு முறை லீவ் எடுக்கப்படும். மேலும் அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்யும் ஊழியர்கள், மாலை நேர பணி செய்பவர்கள், உரிய அதிகாரியின் அனுமதி பெற்று தாமதமாக வரும் ஊழியர்கள் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.
மேலும் அரசு வேலை காரணமாக வெளியூர் அல்லது அலுவலகத்திற்கு வெளியே சென்றாலோ இவர்களுக்கு அபராதம் கிடையாது. இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரைவில் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.