காவல்துறையினர் இனி இதை பயன்படுத்தக் கூடாது! டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு!

0
68

உயர் நீதிமன்ற உத்தரவினடிப்படையில் காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறை உயரதிகாரிகளுக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

கடந்த 2011 ஆம் வருடம் உச்சநீதிமன்ற உத்தரப்பின் படி 2012 ஆம் வருடம் இந்திய அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில் கருப்பு ஸ்டிக்கர்களை 4 சக்கர வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவினடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது.

அதாவது காவல்துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது என்றும், போலீஸ் என்ற ஸ்டிக்கர் உள்ளிட்டவற்றை தனிப்பட்ட வாகனத்தில் பயன்படுத்தக் கூடாது எனவும், உத்தரவிடப்பட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடிப்படையாக வைத்துக்கொண்டு தமிழகத்தில் இருக்கின்ற காவல் துறை உயர் அதிகாரிகள் அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது என்றும் காவலர்கள் தங்களுடைய சொந்த தேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களில் போலீஸ் என்ற ஸ்டிக்கரை காட்சிப்படுத்தும் வகையில் பயன்படுத்தக் கூடாது என்றும், அலுவலக ரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்களில் மட்டுமே போலீஸ் என்ற ஸ்டிக்கர் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

ஆகவே தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து காவல்துறை ஆணையாளர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் போன்ற உயர் அதிகாரிகள் தங்களுக்கு கீழே பணியாற்றும் காவலர்கள் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற ஸ்டிக்கர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்துமாறு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறார்.