சிறுவர்களுக்கான தடுப்பூசி! மத்திய அமைச்சர்கள் பாராட்டு!

0
67

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக, நாட்டில் கடந்த மூன்றாம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் பெரியவர்களை விட சிறுவர்கள் ஆர்வமாக இருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தன்னுடைய வலைத்தளத்தில் தெரிவித்திருப்பதாவது, தடுப்பூசி செலுத்தி கொள்வதில் இளம் இந்தியர்களிடையே அபார உற்சாகம் இருக்கிறது. 15 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தொடங்கி மூன்று நாட்களில் 1.28 கோடி சிறுவர்கள் தடுப்பூசியில் முதல் தவணை செலுத்தி கொண்டார்கள் இது மகிழ்ச்சி தருகிறது என்று கூறியிருக்கிறார்.

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்திருப்பதாவது, நோய் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை வலுப்படுத்துவதில் இளம் இந்தியர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். மூன்று நாட்களில் ஒரு கோடி தடுப்பூசி செலுத்துவது நமது இளைஞர்களின் பொறுப்புணர்வு மற்றும் உற்சாகத்தை பிரதிபலித்து வருகிறது என்று கூறியிருக்கிறார்.

நாட்டில் நேற்று மாலை நிலவரத்தின் அடிப்படையில் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அதிக தடுப்பூசி போடப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் ஆந்திர மாநிலம் முதலிடம் பிடித்திருக்கிறது, ஆந்திராவில் மொத்தம் இருக்கின்ற 15 முதல் 18 வயது வரையில்39.8 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக இமாச்சலப் பிரதேசத்தில் 37% ,குஜராத் மாநிலத்தில் 30.9 சதவீதமும், செலுத்தப்பட்டு இருக்கின்றன.

தாத்ரா நகர், ஹெவேலி மற்றும் டையூ டாமன் யூனியன் பிரதேசத்தில் 28.3 சதவீதமும், கர்நாடக மாநிலத்தில் 25.3 சதவீதமும், உத்தரகாண்டில் 22.5% மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உள்ளிட்ட மாநிலங்களில் முறையே 20.6 மற்றும் 20.5 சதவீதமும், செலுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் 12 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட இருப்பது குறிப்பிடத்தக்கது.