கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! அடைக்கலம் கொடுத்ததாக பாஜகவை சேர்ந்த மேலும் 4 பேர் அதிரடி கைது!

0
85

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த சமயத்தில் அரசு துறைகளில் வேலை வாங்கி கொடுப்பதாகவும், கட்சி பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பி கொடுக்காமலும், 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தன. அதோடு அவருடைய உதவியாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் வேண்டும் என்று கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் கடந்த 15ஆம் தேதி தலைமறைவானார் 8 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தார்கள்.

இந்நிலையில், அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும், பலவிதமான கருத்துக்கள் உலா வந்து கொண்டு இருந்தனர். குறிப்பாக பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை அவருக்கு ஆதரவாக பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனிப்படை காவல்துறையினர் கர்நாடக மாநிலத்தில் நேற்று கைது செய்தார்கள் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கைதான ராஜேந்திரபாலாஜி தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டார். விருதுநகர் காவல் துறையினரிடம் தனிப்படை காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவர்களை ஒப்படைத்தனர். இதற்கிடையில் ராஜேந்திரபாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்ததாக பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், கைது செய்யப்பட்ட ராஜேந்திரபாலாஜி விருதுநகருக்கு அழைத்துவரப்பட்டார். அங்கே அவரிடம் மோசடி வழக்கு குறித்து நேற்று இரவு முதல் காவல்துறையினர் விடிய, விடிய விசாரணை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த விசாரணை மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்திருக்கிறது. இந்த விசாரணையை அடுத்து ராஜேந்திர பாலாஜி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்