பிரப்சிம்ரன் சிங்கின் அதிரடியான சதம்! பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி!!

0
123
#image_title
பிரப்சிம்ரன் சிங்கின் அதிரடியான சதம்! பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி!
நேற்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி சதம் அடித்ததால் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
நேற்று டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் சிகர் தவான், லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் ஷர்மா ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். மறுபுறம் நிதானமாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் சதமடித்து 103 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சாம் கரண் 20 ரன்கள் சேர்த்தார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. டெல்லி கேபிடல்ஸ் அணியில் பந்து வீச்சில் இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
168 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் பிலிப் சால்ட் 21 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் பந்து வீச்சில் ஹர்பிரீட் ப்ரார் அதிரடியாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி வீரர் பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பிற்கு சிறிது அருகில் சென்றுள்ளது.