தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை விடப்பட்டது. 45 நாட்கள் விடுமுறைக்கு பிறகு ஜூன் இரண்டாம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் உற்சாகமுடன் பள்ளிக்கு செல்ல தொடங்கியுள்ளனர். புதிதாக சேர்ந்த மாணவர்கள் மற்றும் மீண்டும் பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். மேலும் பள்ளிக் கல்வித் துறை சார்பாக மாணவர்களுக்கு புத்தகபை மற்றும் இலவச நோட்டு புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வழங்குவது குறித்து பள்ளிகளுக்கு அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் பள்ளி திறந்து ஒரு வாரத்திலேயே அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிக்கு இன்று மற்றும் நாளை இரு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற காரைக்கால் கைலாசநாதர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுவதால் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை திருநள்ளாறு கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளதால் நாளைய உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்தால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்களுக்கு இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 14 மற்றும் 21ஆம் தேதிகளில் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.