நாடு முழுவதும் ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ரயில் பயணத்தை அதிகளவு விரும்புகின்றனர்.
மேலும் பண்டிகை காலம், விசேஷ நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை உள்ளிட்ட நாட்களில் ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகம் காணப்படுவதினால் கூட்ட நெரிசல் ஏற்படுகின்றது. அதனால் தட்கல் மூலம் முன்பதிவு செய்து பயணிகள் பயணம் செய்து வரும் நிலையில் அதில் ஏராளமான முறைகேடு நடப்பதாக ரயில்வே துறைக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றது.
அதனால் தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலிகணக்குகளை கண்டறிந்து IRCTC நீக்கி உள்ளது. மேலும் இது குறித்து ரயில்வே துறை தீவிர ஆலோசனை மேற்கொண்ட நிலையில் தட்கல் முன்பதிவு தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இனி ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படலாம். மேலும் இதன் மூலம் உண்மையான பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஆதார் எண் இணைத்து வெரிஃபிகேஷன் எனப்படும் சரிபார்ப்பு நடத்தப்படும். அவர்களுக்கு மட்டுமே தட்கல் டிக்கெட் ஆன்லைனில் புக் செய்ய முடியும். ஆதார் மூலம் வரும் ஓடிபி எண்னை பதிவு செய்த பிறகு டிக்கெட் புக் செய்யும் வகையில் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இம்மாதம் இறுதியில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.