வாக்கை தவற விட்ட ரஷ்யப் படைகள்! நாசமான மரியுபோல் மருத்துவமனை!

0
87

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில், அமெரிக்கா உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்ப்பதற்கு முனைப்பு காட்டி வந்தது.

இந்த சூழ்நிலையில், உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 24ஆம் தேதி திடீரென்று ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனங்களை பதிவு செய்தனர். ஐநா சபை போர் நிறுத்தததை மேற்கொண்டு பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண வேண்டும் என்று ரஷ்யாவிற்கு கோரிக்கை வைத்தது.

ரஷ்யாவிற்கு உற்ற தோழனாக இருந்து வந்துகொண்டிருக்கும் இந்தியாவும் கூட அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு ரஷ்யாவிற்கு கோரிக்கை வைத்தது. ஆனாலும் ரஷ்யா யாருடைய பேச்சையும் கேட்பதாயில்லை.தொடர்ந்து உக்ரைன் மீது தன்னுடைய தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்யா.

அதோடு உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மக்கள் மற்றும் இந்திய மாணவர்களை மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் மூலமாக விமானங்களை அனுப்பி மீட்டு வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் தலைநகரை நோக்கி ரஷ்யப் படைகள் வேகமாக முன்னேறி வருகின்றன. பல முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் மிகவும் சுலபமாக கைபற்றி இருந்தாலும் தலைநகர் கீவ்வை அவ்வளவு எளிதில் ரஷ்யப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை.

தொடர்ந்து உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகள் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ஆனாலும் ரஷ்யப் படைகள் தலைநகரை பிடிப்பதில் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷியப் படைகள் சுற்றி வளைத்திருப்பதாக தெரிகிறது. அங்கிருக்கின்ற பிராந்தியத் தீவிர சிகிச்சை மருத்துவமனையை நேற்று முன்தினம் இரவில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது. அங்கே 500 பேரை பிணைக்கைதிகளாக ரஷ்ய படைகள் பிடித்து வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த மருத்துவமனையின் அருகிலுள்ள வீடுகளில் இருந்த நபர்களை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்து அவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறார்கள் ரஷ்ய படையை சேர்ந்தவர்கள். மருத்துவமனை கட்டிடத்திற்குள் இருந்த மருத்துவர்கள், நோயாளிகள், என்று 100 பேரையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறார்கள்.

பிணை கைதிகளாக பிடித்த 500 பேரை ரஷ்யப் படைகள் மனித கேடயங்களாக பயன்படுத்தியதாகவும் யாரையும் வெளியேற அனுமதிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ரஷ்யப் படைகளின் தாக்குதல் காரணமாக, மருத்துவமனையின் பிரதான கட்டிடம் பெருமளவில் சேதமடைந்திருப்பதாகவும் அடித்தளத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக வார்டுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ராணுவ கட்டமைப்புகள் மீது மட்டுமே குறி வைக்கப்படும் என்று தெரிவித்து போரைத் தொடங்கிய ரஷ்யப் படைகள் தற்சமயம் மருத்துவமனைகளையும் கூட விட்டுவைக்காமல் தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதன் மூலம் ரஷ்யாவின் திட்டம் தான் என்ன என்று எல்லோரும் யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.