நாளை முதல் திறக்கப்படும் பள்ளிகள்! உற்சாகத்தில் மாணவர்கள்!

0
98

தமிழ்நாட்டில் சுமார் 40 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. அனைத்து பள்ளிகளிலும் முழுமையான வருகை பதிவாகும் விதத்தில் 100% மாணவர்களை நேரடியாக வரவழைத்து பாடங்களை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியிருக்கிறது. வீடுகளில் முடங்கி இருந்த மாணவர்கள் ஊரடங்கு நீங்கியதன் காரணமாக, பள்ளிக்கு வர சுறுசுறுப்புடன் தயாராகி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், 40 நாட்கள் தொடர் விடுமுறை முடிவடைந்து 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. இதுவரையில் சுழற்சிமுறை வாரத்தில் 2 நாட்கள் அல்லது 3 நாட்கள் என வகுப்புகள் நடத்தலாம் என்று விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டிருக்கின்றன. நோய்க்கு முந்தைய நிலையில் இருந்தது போல தற்சமயம் பள்ளிகளுக்கு 100 சதவீத மாணவர்கள் வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோன்று பள்ளிகளில் நோய்த்தொற்று தடுப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை நிச்சயமாக பின்பற்றவும், உத்தரவிடப்பட்டடிருக்கிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அனுப்பியிருக்கின்ற சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

மாணவர்கள் நலன் கருதி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 1ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைத்து வகை பள்ளிகளிலும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என கூறப்பட்டிருக்கிறது.

இதில் 100 சதவீத வருகையுடன் எல்லா மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை நடத்தலாம் இதற்கான அனைத்து விதமான ஆயத்த பணிகளையும் முன்னெடுத்து பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த உத்தரவையடுத்து அனைத்து பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். வீடுகளில் முடங்கியிருந்த மாணவர்களும், பள்ளிக்கு செல்வதற்கு உற்சாகத்துடன் தங்களை தயார்படுத்திக்கொண்டு வருகிறார்கள்.

நடப்பு கல்வி வருடத்தில் செப்டம்பர் மாதம் 1ம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் நடந்தன. அதன் பிறகு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டன. டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, உள்ளிட்ட விடுமுறை வழங்கப்பட்டது.

மறுபடியும் ஜனவரி மாதம் 3ம் தேதி பள்ளிகள் திறக்கவிருந்த சூழ்நிலையில், புதிய நோய்த் தொற்றுகளால் இன்று வரையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த சூழ்நிலையில், 40 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு நாளை மறுபடியும் பள்ளிகள் திறக்கப்படவிருக்கின்றன.

ஆகவே இந்த கல்வி வருடத்தில் மீதம் இருக்கின்ற 3 மாதங்களாவது பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டால் மட்டுமே மாணவர்களின் அடிப்படைக் கல்விக்கான குறைந்தபட்ச முக்கிய பாடங்களை நடத்த இயலும் என்று ஆசிரியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அதோடு 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு அதோடு 12ம் வகுப்பு உள்ளிட்ட வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகவும், ஜெ.இ.இ மற்றும் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகவும் தேவைப்படும் பாடங்களை நடத்தி முடிக்கவும், திருப்புதல் தேர்வுகளை நடத்தவும், பள்ளிகள் தயாராகி வருகின்றன.

அதேசமயம் பிரிகேஜி, எல்கேஜி, யூகேஜி மற்றும் மழலையர் பள்ளிகள், விளையாட்டுப் பள்ளிகள், உள்ளிட்டவற்றை திறப்பதற்கு அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.