பாஜகவுடன் கூட்டணி என்பது எப்போதும் இல்லை என சொன்ன எதிர்கட்சி தலைவர் பழனிச்சாம் இப்போது அதை மீறி மீண்டும் பாஜகவோடு கூட்டணி அமைத்துவிட்டார். 2023ம் வருடம் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது, டெல்லி, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது போன்ற காரணங்களால் பழனிச்சாமியின் மனநிலை மாறியது.
ஆனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததில் சில அதிமுக எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, அவர்களை சரிகட்டும் முயற்சியில் பழனிச்சாமி இறங்கி இருக்கிறார். ஏற்கனவே, வருகிற ஏப்ரல் 25ம் தேதி அதிமுக தலைமை அலுவகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இன்று இரவு அடையார் பசுமை வழிச்சாலையில் உள்ள பழனிச்சாமியின் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டு வருகிறது. சிக்கன், மட்டன் பிரியாணி, மீன், முட்டை, இறால் என 6 வகை அசைவ உணவுகளுடன் இந்த விருந்து அளிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த விருந்தில் அதிமுக எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. சமீபகாலமாகவே செங்கோட்டையன் பழனிச்சாமி மீது அதிருப்தி கொண்டு தனியாக செயல்பட்டு வருகிறார். சட்டசபையில் கூட அவர் பழனிச்சாமியை சந்தித்து பேசுவது இல்லை. அதோடு, டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். செங்கோட்டையன் மூலம் பழனிச்சாமி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை ஒன்றிணைக்கும் முயற்சியிலும் செங்கோட்டையன் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், பழனிச்சாமி கறார் காட்டியதால் அது நடக்கவில்லை. இந்த நிலையில்தான் பழனிச்சாமி கொடுத்த இரவு விருந்தை செங்கோட்டையன் புறக்கணித்திருக்கிறார்.