மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. மிகவும் திறமையான நடிகராக பார்க்கப்படுபவர் இவர். பெரும்பாலும் வில்லன் வேடத்தில் நடிப்பார். தமிழில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார். தெலுங்கில் நானி நடித்த தசரா படத்திலும் வில்லனாக நடித்திருப்பார்.
கார்த்தி சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் இவர் நடித்திருந்தார். தெலுங்கில் தேவரா, டக்கு மகாராஜ், ராபின்ஹுட் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ள குட் பேட் அக்லி படத்திலும் நடித்திருந்தார்.
இவர் படப்பிடிப்பின் போது தன்னிடம் அத்து மீறியதாக மலையாள நடிகை வின்ஸி அலோசியஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். மேலும், போதைப்பொருளை பயன்படுத்திவிட்டு தன்னிடம் அவர் தரக்குறைவாக நடந்துகொண்டதாக வேறொரு ஒரு நடிகையும் புகார் தெரிவித்துள்ளார். எனவே, அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்., இதைத்தொடர்ந்து அவர் கேரளா எர்ணாகுளத்தில் அவர் தங்கியிருந்த ஒரு ஹோட்டலில் போதை பொருள் ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு போதைப்பொருள் எதுவும் சிக்கவில்லை. அதேநேரம் போலீஸ் வருவதற்கு முன்பே ஷைன் டாம் சாக்கோ அங்கிருந்து தப்பி ஓடியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் சைன் டாம் சாக்கோ நேரில் வந்து வாக்குமூலம் அளித்தார். அதில், சிலர் தன்னை தாக்க வருவதாக கேள்விப்பட்டதால் அங்கிருந்து ஓடினேன் என கூறினார். இந்நிலையில், தற்போது அவரை கேரள போலீஸ் கைது செய்திருக்கிறது. இந்த சம்பவம் கேரள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.