நாடு முழுவதும் கொரோனா பெருதொற்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது கொரோனா மீண்டும் தலை தூக்கி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. அதனால் விமான நிலையங்கள் மற்றும் மக்கள் அதிக கூடும் இடங்களில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதிக அளவு கூட்டத்தை சேர்க்க வேண்டாம் என சுகாதாரத்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பெரியவர்களுக்கு 30 படுக்கைகளும், சிறியவர்களுக்கு 20 படுக்கைகளும் என 50 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அதிநவீன மருத்துவ உபகரணங்களும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில் மதுரை மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிக அளவு காணப்படவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வார்டு மற்றும் உபகரணங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இங்கு சுழற்சி முறையில் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் பணியாற்றுவார்கள்.
காய்ச்சலுக்காக தனி வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.