தமிழகத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, ஆகியவற்றில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான முழு ஆண்டு தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில் 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது.
கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் இரண்டாம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது பள்ளி கல்வித்துறையின் அறிவிப்பில் 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வு மற்றும் பொங்கல் விடுமுறை பற்றியும் கூறப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறந்து ஒரு மாதம் கூட ஆகாமல் மீண்டும் காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுகளுக்கான தேதி வெளியானது மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பள்ளி கல்வித்துறை கூறுகையில் வாரத்தில் இரண்டு விளையாட்டு வகுப்புகள் ஒதுக்கீடு செய்வது அவசியம், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நன்னெறி வகுப்புகளுடன் புதிதாக ஈஸி இங்கிலீஷ், பன் வித் மேத்ஸ் வகுப்புகள் நடத்த உள்ளனர். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மொழி ஆய்வகம், நூலகம், கல்விசார் செயல்பாடுகள், கல்வி சாரா செயல்பாடுகளுக்கு பாடம் வகுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி, உடல் நல மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், வாய்ப்பாடு நடனம், கலையரங்கம், ஆகியவற்றில் கல்வி சாரா செயல்பாடுகளில் பாட வகுப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பு கல்வி, மனநல மற்றும் வாழ்வியல் திறன், நீதி போதனை, உள்ளிட்ட பாட வகுப்புகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பாட வகுப்புகளில் எழுதுதல், கவனம் குவித்தல், ஸ்மார்ட் இலக்குகள், உன்னை அறிந்தால் என மாணவர்களின் நலன் சார்ந்த பாடங்கள் எடுக்கப்படும். இந்த கல்வியாண்டில் மொத்தம் 210 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை விடப்படும். செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும். செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை. இந்த காலாண்டு விடுமுறையில் ஆயுத பூஜை, விஜயதசமி விதிமுறைகளும் அடங்குகின்றது.
டிசம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும். அதன் பிறகு டிசம்பர் 24ஆம் தேதி யிலிருந்து ஜனவரி 5ஆம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படும். அரையாண்டு தேர்வு முடிவடைந்த பிறகு ஜனவரி 14 முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தைப்பூச திருவிழா விடுமுறை. ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெறும்.
25ஆம் தேதி அடுத்த ஆண்டிற்கான கோடை விடுமுறை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாவட்டங்களில் ஏதேனும் பண்டிகைக்காக உள்ளூர் விடுமுறை மற்றும் இயற்கை பேரிடரால் வழங்கப்படும் விடுமுறை உள்ளிட்டவை சரி செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் வேலை நாளாக அறிவிக்கப்படலாம் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.