TVK Vijay: திமுகவை தோற்கடிப்பதற்காகவே அரசியல் கட்சி துவங்கியது போலவே இருக்கிறது விஜயின் செயல்பாடு. ஏனெனில், கட்சி துவங்கியது முதலே அவர் திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதல் கட்சி மாநாட்டிலும் சரி, கட்சி துவங்கி ஒரு வருடம் முடிந்த விழாவிலும் சரி, கட்சி பொதுக்கூட்டத்திலும் சரி அவர் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே டார்கெட் செய்து பேசி வருகிறார். அதிமுக பற்றி அவர் எங்கும் பேசவில்லை.
மன்னராட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்.. ஊழல் அரசியலை ஒழிப்பேன் என்று தொடர்ந்து பேசி வருகிறார். இதில் திமுகவை மன்னராட்சி என அவர் சொல்வதே பெரும் விவாதங்களை கிளப்பியது. திமுகவில் அப்பா – மகன் – பேரன் என தொடர்ந்து முதல்வர் பதவிக்கு வருவது விஜய்க்கு பிடிக்கவில்லை. எனவேதான் அவர் அரசியல் கட்சியே துவங்கியதாக பார்க்கப்படுகிறது.
அதோடு, தங்களோடு கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு என அறிவித்தார் விஜய். எனவே, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தங்கள் பக்கம் வருவார்கள் என விஜய் எதிர்பார்த்தார். ஆனால், அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை. அப்போதே, எனக்கு ஆசை காட்டி திமுக கூட்டணியிலிருந்து பிரிக்க பார்க்கிறார்கள் என திருமாவளவன் கூறினார். எனவே, அதிமுகவுடன் தவெக இணையும். இதைத்தவிர விஜய்க்கும் வேறு வழியில்லை என பலரும் நினைத்தார்கள்.
ஆனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டது. எனவே, விஜய் தனித்துவிடப்படுவாரா என்கிற எண்ணமும் பலருக்கும் எழுந்துள்ளது. ஏனெனில், நாம் தமிழர் கட்சி சீமானும் விஜயுடன் இணைவார் என தோன்றவில்லை. இந்நிலையில், மேடை ஒன்றில் பேசிய திருமாவளவன் ‘தவெகவுடன் சேரும் வாய்ப்பும் எங்களுக்கு இருந்தது. ஆனால், அந்த கதவையும் நான் மூடிவிட்டேன். நீங்கள் நினைக்கிற சராசரி அரசியல்வாதி நான் இல்லை. பாமக, பாஜக இடம் பெற்றுள்ள கூட்டணியில் விசிக இடம் பெறாது. அதனால் எந்த பாதிப்பு வந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலையே இல்லை’ என பேசியிருக்கிறார்.
விஜயுடன் கூட்டணி போட வேண்டும் என்பதே பழனிச்சாமியின் எண்ணமாக இருந்தது. ஆனால், முதல்வர் பதவியை ஆளுக்கு இரண்டரை வருடம் என பிரித்து கொள்வோம் என விஜய் சொன்னதை பழனிச்சாமி ஏற்கவில்லை. ஏதேனும் ஒரு கட்சியின் கூட்டணி வைத்தால் மட்டுமே திமுகவை தோற்கடிக்க முடியும் என்பதால் பாஜக பக்கம் போய்விட்டார்’ எனவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.