ஆதிதிருவரங்கம் கோவிலின் வரலாறு!

0
341

மூலவர்: ரங்கநாத பெருமாள்

அம்மன்/ தாயார்: ரங்கநாயகி தாயார்

தலவிருட்சம்: புன்னாக மரம்

தீர்த்தம்: பெண்ணையாறு

நெய்வைத்தியம்

ஆதி திருவரங்கம் ரங்கநாதர் சுவாமிக்கு நாள் தோறும் நெய்வேத்தியமாக சுத்த அன்னம் படைக்கப்படுகிறது. மற்றபடி உபயோதாரர்கள் ஆலய நிர்வாக முடிவுபடி நெய் வைத்தியங்கள் படைக்கப்படுவதுமுண்டு.

ஆதிதிருவரங்கம் திருத்தளத்தில் கோவிலின் தானிய களஞ்சியம் பிரம்மாண்ட தோற்றத்துடன் காட்சி தருகிறது. இந்த நெற்களஞ்சியம் 3 பாகமாக பிரிக்கப்பட்டு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டனர். கீழ்பாகம் சிறுதானியமும், நடு பாகம் கம்பும், மேல் பாகம் கேழ்வரகு தானியங்களும், சேமித்து வைக்கப்பட்டனர்.

வரட்சியான காலங்களில் சேமித்து வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது, அதோடு அன்னதானம் செய்யவும், பயன்படுத்தப்பட்டது. நற்களஞ்சியத்தின் மேற்ப்பாகத்தில் அன்னலட்சுமி தாயார் சிலை சிறப்பாக அமைய பெற்றுள்ளது.

மன்னர்கள் காலத்தில் கோவில்களை நிர்மாணித்து பராமரிக்க ஒவ்வொரு கோவிலுக்கும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை மானியமாக வழங்கினார்கள். அந்த மானிய நிலங்களில் விவசாயம் செய்து அதில் வரும் விலைச்சலில் ஒரு பங்கை கோவிலுக்கு வரியாக செலுத்த வேண்டும், அப்படி கிடைக்கும் அதிகப்படியான தானியங்களை சேமித்து வைத்ததற்கு ஆலயங்களில் பெரிய களஞ்சியங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இன்று நம்முடைய பாரம்பரிய விவசாய வரலாற்றை சொல்லும் அடையாள சின்னங்களாக நிற்கிறது. தானிய களஞ்சியங்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பயன்பாட்டிலிருந்து வந்த ஆலய தானிய களஞ்சியம் இன்று மக்களுக்கு காட்சி பொருளாக நிற்கிறது.

ஆதிதிருவரங்கம் ஆலயத்தின் ராஜகோபுரத்திற்கு அருகிலேயே அமைந்திருக்கிறது இந்த களஞ்சியம் இதன் வரலாற்றை ஆலயம் மண்டபத்தில் அமர்ந்தவாறு விவரித்தார் அந்த கிராமத்தின் 91 வயதானவரான ஜெயராமன் வட ஆற்காடு, தென்னார்காடு, என்று மொத்தம் 12 காடுகள் இந்த பகுதியில் ஆதி காலத்திலிருந்து இதில் ஆதிதிருவரங்கம் தென்னார்க்காடு முடியும் இடத்திலும், வட ஆற்காடு தொடங்கும் இடத்திலும், இருக்கிறது.

காடு என சொல்லப்பட்ட கிராமங்களை தற்போது நாடு என சொல்கிறார்கள், இதில் நடு நாடு என்பது இந்த பகுதி இந்த நாட்டை செழிப்பாக வைத்திருந்தது வட கருணையாறு தான் கோவிலின் வடக்கே தென்பெண்ணையாறு செல்வதால் இதனை வட பெண்ணையாறு என தெரிவிக்கிறார்கள். திருக்கோவிலூரிலிருந்து ஆதிதிருவரங்கம் வரையில் கோவிலுக்கு சொந்தமாக ஆதிகாலத்தில் 400 ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தது. இது காலப்போக்கில் குறைந்து 100 ஏக்கராக சுருங்கி விட்டது.

மன்னர்கள் காலத்தில் கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களில் விவசாயம் செய்து அதில் கிடைக்கும் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு தானியத்தை கோவிலுக்கு வரியாக வழங்க வேண்டும். அப்படி கிடைக்கும் தானியங்களை சேமித்து வைப்பதற்காக மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது தான் இந்த களஞ்சியம்.

வரியின் மூலமாக கிடைக்கும் நெல், வரகு, கேழ்வரகு, கம்பு, போன்ற தானியங்களை களஞ்சியத்தில் சேமித்து வைத்திருந்தார்கள். இப்படி இந்த களஞ்சியத்தில் சேமித்து வைத்த தானியங்களைக் கொண்டு ஆலயங்களில் வேலை செய்பவர்களுக்கு தானியங்களை சம்பளமாக வழங்கியிருக்கிறார்கள்.

எனக்கு விபரம் தெரிந்த பிறகு களஞ்சியத்தில் எந்த விதமான தானியங்களையும் சேமித்து வைக்கவில்லை. என்னுடைய பாட்டனார் காலத்தில் தானியங்களை இந்த களஞ்சியத்தில் சேமித்து வைத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த களஞ்சியம் பராந்தகச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்கிறார்கள். கோவில் மூலஸ்தானம் இயங்கும் பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிவிக்கிறார்கள்.

இந்தக் ஆலயத்தை வளர்த்து கட்டுமளவுக்கு அந்த காலத்தில் நடுநாடு வளமாக இருந்திருக்கிறது. எங்களுடைய நாட்டின் விளைச்சலை சொல்லும் விதமாக இந்த களஞ்சியம் நிற்கிறது. இதில் சுமார் 5000 களம் தானியங்களை சேமித்து வைக்கலாம் என என்னுடைய பாட்டனார் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தற்சமயம் களஞ்சியத்தில் சேமிக்குமளவுக்கு தானியங்கள் இல்லாததாலும், சரியான பராமரிப்பு இல்லாததாலும், களஞ்சியம் சிதைந்து கொண்டே செல்கிறது. பாரம்பரிய விவசாயத்துடைய அருமையை சொல்லும் இந்த களஞ்சியத்தை பாதுகாக்க அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டால் இதற்குப் பிறகு வரும் சந்ததிகளுக்கு அது உபயோகமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

திருத்தல வரலாறு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது ஆதி திருவரங்கம். இந்த கோவில் முதல்யுகமாகிய கிருதாயகத்தில் அமைக்கப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது.

முதல் யுகம் மற்றும் முதல் அவதாரம் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் இது ஆதி முதல் திருவரங்கம் என்றழைக்கப்படுகிறது. இந்த கோவில் 3 முக்கிய பாக்கியங்களை பக்தர்களுக்கு வழங்குகிறது. அதில் முறையே வேலை, திருமணம் மற்றும் புத்திர பாக்கியம்.

இந்த பகுதியில் இருக்கின்ற பெருமாள் சயன காலத்தில் காட்சியளிக்கிறார். இதனை போக சயனம் என தெரிவிக்கிறார்கள் போகம் என்றால் மகிழ்ச்சி எனப்பொருள். அவருடைய இந்த திருவுருவம் தமிழகத்தில் இருக்கின்ற சயனபாலபெருமாள்களில் பெரியது என சொல்லப்படுகிறது.

அவர் 5 தலை கொண்ட ஆதிசேசனின் மீது படுத்துள்ளார். அவருடைய தலையை ஸ்ரீதேவி தன்னுடைய மடியில் தாங்கியுள்ளார். அவருடைய கால்களில் ஒன்றை மூதேவி பிடித்துள்ளார் மற்றொரு கால் ஆதிசேசனின் வால் மீது வைக்கப்பட்டுள்ளது.

அவருடைய தோள்பட்டையை கருடபாகமாம் தாங்கி இருக்கின்றார். அவருடைய இடது கை விரல்கள் 4 வேதங்களை குறிக்கின்றன. அவரின் வயிற்றுக்கு மேலாக பிரம்மதேவன் காட்சி தருகிறார். இந்த நான்கு வேதங்களை பிரம்மாவிற்கு எடுத்துரைப்பதாக வருணிக்கப்படுகிறது.

வேதங்களை உபதேசிப்பதால் இந்த காட்சியை கண்டால் உத்யோகப் பிராப்தம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதோடு தம்பதி சமேதராக பெருமாள் காட்சியளிப்பதாலும், சந்திரனுக்கு சாப விமோசனம் கொடுத்து அவர் மனைவியுடன் சேர்ந்ததால் திருமணமாகும் பாக்கியம் கிடைக்கும் எனவும், கிருதாயுகத்தில் சுரப்ப கீர்த்தி என்னும் தொண்டை மன்னன் நாரதரின் ஆலோசனையின்படி இங்கு தன்னுடைய மனைவியுடன் வந்து வணங்கியதால் நான்கு ஆண் வாரிசுகளை பெற்றதாக வரலாறு தெரிவிக்கிறது.

ஆகவே புத்திர பாக்கியம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது, இந்த கோவில் கிருஷ்ணருக்கு விருப்பமான தளமாக விளங்குவதால் இது கிருஷ்ணர் கொடிமரம் அருகில் உயர்ந்த இடத்தில் தனி சன்னதியில் காட்சியளிக்கிறார். மேலும் ஒரு கையில் வெண்ணையும், இன்னொரு கையில் உரியோடும் தோன்றுகிறார்.

பஞ்சக கிருஷ்ணாரான்ய சேத்திரத்தில் நடுநாடு என்று சொல்லப்பட்ட பகுதியில் ஆதிதிருவரங்கமிருக்கிறது.

கிருஷ்ணரின் பெயரினால் விளங்கும் காற்றில் அமைந்திருப்பதால் கிருஷ்ணாரண்யம் எனவும், பெயர் பெற்றது. தமிழ், இலக்கணம், இலக்கிய முறைப்படி காடும் காட்டைச் சார்ந்த பகுதியில் இத்திருத்தலம் இருப்பதால் இந்நிலம் முல்லை நிலம் எனப்படும்.

காட்டைச் சார்ந்த பகுதியில் முழு முதல் கடவுள் கிருஷ்ணர் இருப்பதால் இத்திருத்தலத்தில் கிருஷ்ணருக்கு ஒரு தனி சன்னதி உண்டு. இது பலிபீடத்திற்கு பின்புறம் மேல் மாடியில் அமைந்திருக்கிறது.

பக்தர்கள் பலிபீடத்திலிருந்து கிருஷ்ணரை வணங்குகிறார்கள். இச்சனரியில் பாலகிருஷ்ணர் ஒரு கையில் வெண்ணையும் மற்றொரு கையில் உரியோடும் ஆண் உருவோடு காட்சி தருகிறார்.

தென்பெண்ணையாற்றின் தென்கரையோரம் மேட்டுப் பாங்கான பரப்பில் இந்த கோவில் அமைந்துள்ளது. இதன் தோற்றமும், இதனை உராய்ந்தார் போல வடக்கிலும், கிழக்கிலும், நீர் வழிந்தோடும் பெண்ணை ஆற்றின் அழகும், மனதை கவர்ந்த கண்கொள்ளாக் காட்சியாக இன்பம்
தருகிறது.

இந்தக் கோவிலில் மேல் தளத்திற்கு செல்ல படிக்கட்டுகள் இருப்பது வரலாற்று சிறப்பு. மேலிருக்கின்ற பால கிருஷ்ணர் சன்னதிக்கு செல்வதற்கும் மற்றும் மூலவர் சன்னதிக்கு மேல் பெருமாள் மூச்சு விடும் இடம் காண்பதற்காகவும், இப்படிகட்டுகள் பயன்படுத்தப்பட்டன.

அதற்கு சான்றாக படிக்கட்டின் அடிப்பாகத்தில் யானையின் நான்கு பாத சுவடுகள் கருங்கல்லால் பதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே பதிக்கப்பட்ட யானையின் மாத சுவடுகள் கோவில் புனரமைத்தல் பணிகள் நடைபெறும் பொழுது மறைந்து விட்டது.