தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை.. தமிழக பாஜக தலைவர் இரங்கல்..!

0
162

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கால்களை இழந்து சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இளம் கால்பந்து வீராங்கனையான பிரியா உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவரின் கால்களை இழந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், முதல்வர் ஸ்டாலின் மாணவியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளார். மேலும், அவரி சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி பிரியாவின் மரணத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். திமுக அரசு, சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.