தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களை நேரில் சந்தித்து பரிசு வழங்கி வருகின்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பரிசு வழங்கும் விழா மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு முதற்கட்டமாக மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது முடிந்தது. அதனைத் தொடர்ந்து இன்று மாமல்லபுரத்தில் ஹோட்டல் ஒன்றில் இரண்டாம் கட்டமாக மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசியது தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வேல்முருகன் பேசியதை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என தமிழக வெற்றிக் கழகத்தின் இணைச் செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கலந்து கொண்டார். தவெக தலைவர் விஜய் மாணவிகளை பரிசு வழங்கும்போது அரவணைத்து புகைப்படம் எடுத்துக் கொள்வது தொடர்பாக சர்ச்சைக்குரிய பேச்சை முன் வைத்துள்ளார்.
இது குறித்து தவெகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வீரமங்கை வேலு நாச்சியாரையும் மக்கள் சேவகர் அஞ்சலையம்மாளையும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களாக ஏற்று பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் தலைவரைப் பார்த்து அநாகரீக பேச்சை வேல்முருகன் முன் வைத்துள்ளார்.
இந்த பேச்சுக்கு திமுக சார்பாக கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். மேலும் தான் பேசியது தவறு என்பதை உணர்ந்து வேல்முருகன் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏவுக்கு இதுவே இறுதி எச்சரிக்கை என தவெக சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.